கற்றாழை , நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு பங்காய் இருந்த தாவரம். ஆம், இருந்தது! இன்றிருக்கும் இடப்பற்றாகுறையில் வீட்டில் செடி எல்லாம் இருக்கிறதா என்பதே கேள்வி தான். நமக்கு முந்தின தலைமுறையினர் கற்றாழையை சரியாக பயன்படுத்தினர், இன்றளவுக்கு அன்று டெக்னாலஜி வளரந்திருக்க வில்லை இருந்தும் மனிதன் தன்னை சுற்றி இருந்த இயற்கையை தனக்கு சாதகமாக்கி கொண்டு அதனோடு எப்படி இணைந்து வாழ்வது என தெரிந்து வைத்திருந்தான். இன்றோ நம்மில் அநேகருக்கு நாம் அன்றாடம் பார்க்கும் (எஞ்சி இருக்கும்)தாவரங்களின் பெயர்களோ, அல்லது விலங்கு/பறவைகளின் பெயர்களோ கூட தெரிவதில்லை. சரி அதெல்லாம் வேற பிரச்சனை இதை பற்றி கருத்துகளை தெரிவிக்க விரும்பினால் கீழே கமெண்டிலோ, இல்லை என்னுடன் வாட்சாப்பிலோ தாராளமாக பேசலாம்.
நாம் கற்றாழைக்கு செல்லுவோம் வாருங்கள். கற்றாழையை நாம் பாரம்பரியமாக அதன் மருத்துவ நலன்களுக்கு பயன்படுத்தி வருகிறோம். ஆனால் நாம் இன்று பெரிதும் பயன் படுத்தும் ஆங்கில மருத்துவத்தில் இதை பரவலாக பயன்படுத்துகின்றனர் என்பது நமக்கு தெரியுமா? ஆமாங்க, கற்றாழையில் பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்க்கும் திறன் நிறைய உள்ளது இதனால் இது மலச்சிக்கலிலிருந்து, நீரிழிவு நோய் வரை எல்லாவற்றுக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.
கற்றாழை பற்றி ஒரு குட்டி ஸ்டோரி:
கற்றாழை பற்றி நம் எல்லாருக்குமே தெரியும். ஒரு வேளை தெரியவில்லை என்றால், மக்களே உங்களுக்கு தான் இது.
- கற்றாழை சதைப்பற்றான தாவரவகையை சார்ந்தது
- இதற்கு கிளைகள் கிடையாது இலைகள் மட்டும் தான்.
- இதன் கசப்பான இலைகள் இதனை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கிறது.
- இதன் இலைகளில் உள்ள அந்த குழகுழப்பும், கசப்புமான ஜெல்லில் தான் மொத்த வித்தையும் இருக்கிறது.
- இதில் எக்கசெக்க குணமாக்கும் திறன்கள் உள்ளன.
- இந்த ஜெல் 90% நீரால் ஆனது. இதில் நம் உடலில் இருக்கும் 20 அமினோ ஆசிட்களில் 18 அமினோ ஆசிட்கள் உள்ளன.
- இதுமட்டுமல்ல இதில் வைட்டமின் A,B,C மற்றும் E உள்ளது.
- இதிலிருக்கும் மஞ்சள் நிற சாறு மலமிளக்கும் மருந்து (லாக்சேடிவ்) ஆக பயன்படுத்த படுகிறது.
- கற்றாழையில் உள்ள அசிமன்னன் என்னும் ஒரு வகையான மாவு சத்து நம் செல்களுக்கு வலுவளிப்பதுடன், அதிலிருக்கும் அழுக்குகளையும் நீக்குகின்றது.
இதை ஆயுர்வேதம், சீன மருத்துவம், பிரிட்டிஷ் மருத்துவங்களில் காலாகாலமாக பயன்படுத்தி வருகின்றனர். சரி வாருங்கள் இப்போது சில முக்கியமான நலன்களுக்குள்ளாக செல்வோம்.
சருமத்திற்கு:
கற்றாழை நம் சருமத்திற்கு மிக நல்லது. நீங்கள் அதின் குழகுழப்பான தன்மையை கடந்து வந்து விட்டால், அதை பயன்படுத்தும் போது, அது உங்கள் சருமத்திற்கு அளிக்கும் புத்துணர்ச்சியையும், குளுமையையும் நன்கு அனுபவிக்கலாம். அதுமட்டுமில்லை
1. வறண்ட சருமத்திற்கு
கொஞ்சம் கற்றாழை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி பால் சில துளி பன்னீர் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து பசை போன்று செய்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் பூசி 20 நிமிடம் வரை காத்திருக்கவும். பின்னர் கழுவிடலாம்.
2. கற்றாழை ஸ்கிரப்:
ஒரு கப் கற்றாழை ஜெல், ஒரு கப் சர்க்கரை/ரவை, 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு அனைத்தையும் கலந்து கொள்ளவும். இந்த கலவையை வைத்து சருமத்தை நன்கு தேய்த்து கழுவவும். இதிலிருக்கும் சர்க்கரை/ரவை சருமத்திலிருக்கும் இறந்த செல்களை நீக்க உதவும், கற்றாழையும், எலுமிச்சையும் தழும்புகளையும், வெய்யிலில் பாதிப்படைந்த செல்களையும் குணப்படுத்த உதவும்.
3. முகப்பருவிற்கு :
கொஞ்சம் கற்றாழை ஜெல், அரைக்கப்பட்ட அக்ரூட், தேன் என எல்லாவற்றையும் மாவு போன்ற பதத்தில் கலந்து கொள்ளவும். கற்றாழையில் குணப்படுத்தும் திறனும், தேனிலுள்ள ஆண்டி-ஆக்சிடண்டும்(Anti-Oxidants) தெளிவான , மிருதுவான சருமத்தை பெற உதவும்.
4. சருமம் வயதாகாமல் தடுக்க:
கற்றாழைக்கு சருமம் வயதாவதை தடுக்கும் திறன்கள் உள்ளதென சில ஆரம்பகால ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
45 வயதிற்கு மேற்பட்ட 30 பெண்களை, ஆய்வு செய்ததில் 90 நாட்கள் தொடர்ந்து கற்றாழை பூசுவதன் மூலம் (elasticity) நெகிழ்ச்சித்தன்மை அதிகரிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
மற்றொரு ஆய்வில் கற்றாழை சருமம் சிவப்பாவதை(Reddishness/Rashes) தடுப்பது தெரிய வந்துள்ளது, ஆனால் கூடவே செல்களை நீரிழக்க(dehydrate) செய்வதும் தெரிய வந்துள்ளது.இந்த நீரிழக்க வைக்கும் தன்மை இதன் குறைபாடு தான்.
கற்றாழையால் சொரியாசிஸ் போன்ற நோய்களுக்கு உதவ முடியும் என ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன.
5. உடல் எடையை குறைக்க:
கற்றாழை ஆரோக்கிய பானங்கள், டயட் சப்லிமெண்டுகள்(Suplimemts) என அநேக பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. கற்றாழையில் ஆண்டி-ஆக்ஸிடண்டுகள் நிறைய உள்ளது, இவை எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கற்றாழையில் உள்ள புரதம் தசை வளர்ச்சியில் உதவுவதுடன், எக்கசெக்க ஆற்றலையும் தருகிறது. உடல் எடை குறைப்பில் கற்றாழையின் பங்கு பெரிதாக இருக்கும் என அநேக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆனால் அதற்கு கற்றாழையை தொடர்ந்து நீண்ட காலம் உட்கொண்டு வர வேண்டும்.
கற்றாழையை எப்படி ஜூசாக உட்கொள்வது?
கற்றாழையின் இயற்கையான சுவை கசப்பு. எனவே இதை உட்கொள்வதாய் இருந்தால் அதன் ஜெல்லினை துண்டு துண்டாக வெட்டி இனிப்பான பழத்துடன் கலந்து அரைத்து இனிப்பான ஜூசாக மாற்றி விடலாம். இதனை வடிகட்டி அப்படியே குடிக்கலாம். அப்பொழுதும் கசப்பு தெரிந்தால் உடன் தேன் சேர்த்து பருகலாம். இத்துடன் எலுமிச்சை சாறும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆனால் இது லாக்ஸேடிவ்(Laxative) என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்
6. சென்சிடிவ்(அதிக உணர்ச்சிமிக்க) சருமத்திற்கு:
சென்சிடிவான சருமம் உடையவர்கள் கொஞ்சம் கற்றாழை ஜெல், வெள்ளரிக்காய் சாறு, தயிர்/ யோகர்ட்(Yogurt), ரோஜா எண்ணெய் என எல்லாவற்றையும் எடுத்து ஒன்றாக கலந்து பசைபோன்று ஆக்கிக்கொள்ளவும். பசையை சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடவும்.
7. தலைமுடிக்கு:
கற்றாழையில் புரோட்டியோலிடிக்(Protiolytic) என்சைம்கள்(enzymes) உள்ளன, இவை தலையிலுள்ள இறந்த செல்களை குணப்படுத்த உதவுகிறது. இது கண்டிஷ்னராக(Conditioner) செயல்பட்டு முடியை மென்மையாகவும், பளப்பளப்பாகவும் ஆக செய்கிறது. அத்தோடு இது முடி வளர்ச்சியை தூண்டி, பொடுகை குறைத்து, முடியை சரிசெய்ய உதவுகிறது.
கற்றாழையில் முடியிலுள்ள கெராட்டினில்(Keratin) உள்ள மாதிரியே ரசாயன அமைப்புகள் உள்ளன. இது முடிக்கு ஊட்டசத்து அளித்து புத்துணர்ச்சி அளிப்பதன் மூலம் நெகிழ்ச்சி(elasticity) தன்மையை அதிகரிக்கிறது. இது முடி உடைவதை தடுக்க உதவும்.
கச்சிதமான பேக்:
உங்கள் முடிக்கு ருசியான ரெசிப்பி இதோ
சமமான அளவு கற்றாழை சாற்றையும், தேங்காய் எண்ணெயையும் எடுத்துக்கொள்ளுங்கள். இதை கலந்து முடியில் பூசி எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் ஊற விடுங்கள். இது வலுவான, மிருதுவான, துள்ளும்(Bouncy) கூந்தலை பெற உதவும்.
8. எரி காயங்களுக்கு:
கற்றாழையில் உள்ள ஆறுதலளிக்கும்(Soothing) தன்மையும், ஈரத்தன்மையும், குளுமை தன்மையும் இதனை எரி காயங்களை குணப்படுத்தும் மருந்தாக வடிவமைத்துள்ளது.
2013 இல் 50 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் எரி காயங்களில் கற்றாழை ஜெல்லை தடவுவது நல்ல பலனளிப்பது தெரியவந்துள்ளது.கிரீமை பயன்படுத்துவதை விட சீக்கிரமாக வலியையும், புண்ணையும் இது குணப்படுத்துகிறது. அதுவுமல்லாமல் கிரீமை விட இது மிக விலை குறைவானதும் கூட.
இன்னும் ஆய்வுகள் இதை பற்றி நடந்து கொண்டு இருக்கின்றன. இருந்தும் கற்றாழை எரி காயங்களை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது என்பது நிதர்சனம். முக்கியமாக இந்த காயங்கள் லேசானதாக இருந்தால் நீங்கள் கற்றாழை சாற்றையே தினமும் தடவி வரலாம்.
9. செரிமானத்திற்கு:
கற்றாழை உட்கொள்வது உங்கள் செரிமானத்திற்கு உதவுவதுடன், வயிற்று கோளாறுகளில் ஆறுதல் அளிக்கிறது.
2018இல் 151 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கற்றாழை இரிட்டபில் பொவெல் சின்ட்ரோம்(Irritable Bowel Syndrome) இல் வரும் அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவுவது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாது உட்கொள்வது, கற்றாழை அல்சர் உண்டுபண்ணும் பாக்டீரியாவை அழிக்க உதவுகிறது.
10. பல்பிரச்சனைக்கு:
பற்சொத்தையும், ஈறு பிரச்சனைகளும் இன்று பரவலாக உள்ளது. இதை தடுக்க ஒரே வழி பற்களில் பாக்டீரியாக்கள் தங்க விடாமல் பார்த்துக்கொள்வது தான்.
300 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 100% தூய்மையான கற்றாழை சாற்றினால் வாயை கொப்பளிப்பது பெரிய வித்தியாசத்தை காட்டியிருக்கிறது. 4 நாட்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்துதல் மவுத்வாஷிலுள்ள (Mouthwash)குளோரெக்சிடின் (chlorhexidine)போல பலன் அளித்துள்ளது.
மற்றொரு ஆய்வில் கற்றாழையை கொண்டு 15-30 நாட்கள் தொடர்ந்து கொப்பளிப்பது வாயிலிருக்கும் Streptococcus mutans பாக்டீரியாவையும், Candida albicans ஈஸ்டையும் கட்டுப்படுத்த உதவுவது தெரிய வந்துள்ளது.
11. மலச்சிக்கலுக்கு:
கற்றாழை மலச்சிக்கலுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறை, ஜெல் பயன்படப்போவதில்லை சாறு தான் பயன்படப்போகிறது. இலையின் தோலுக்கு கீழ் இருக்கும் மஞ்சள் நிற குழகுழப்பான பசை தான் அது
இதற்கு காரணம் இதிலிருக்கும் அலோயின்(aloin), பார்பலோயின் (barbaloin) என்பவை தான். இவற்றுக்கு லாக்சேடிவ் (Laxative) திறன் அதிகம் உள்ளது.
12. நீரிழிவு நோய்க்கு:
பாரம்பரியமாக சர்க்கரை நோய்க்கு கற்றாழை மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. இது இன்சுலின் திறனை அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
மனிதர்கள் மேலும், மிருகங்கள் மேலும் நடத்தப்பட்ட நிறைய ஆய்வுகள், கற்றாழை 2ஆம் வகை நீரிழிவை கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஆய்வுகள் ஆரம்பகட்ட ஆய்வுகள் தான். இதற்கு இன்னும் நிறைய ஆய்வு முடிவுகள் தேவைப்படுகின்றது.
13. விளைச்சலை பாதுகாக்க:
2014இல் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கற்றாழை சாற்றை தக்காளி செடியின் மீது தடவி பார்த்துள்ளனர். இது தக்காளியின் மீது கெட்ட பாக்டீரியாக்கள் வளரவிடாமல் தடுக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
இதே போன்ற விடைகள் ஆப்பிள் மீது நடந்த ஆய்விலும் கிடைத்துள்ளது. இது எல்லா விளைச்சல்களையும் பாதுகாக்க பயன்படும் என தெரியவந்துள்ளது.
14. ஹெர்பிஸிக்கு(Herpes):
0.5% கற்றாழை சாற்றினை ஒரு நாளுக்கு 3 முறை 5 நாட்களுக்கு தொடர்ந்து 2 வாரங்கள் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
15. கண்களுக்கு:
2012இல் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் கண் இமைகள் மீதும் சுற்றியும் தடவுவதன் மூலம் சுற்றி இருக்கும் வீக்கதையும், சிவந்த கண்களையும் குணப்படுத்த உதவுவது தெரிய வந்துள்ளது.
ஆனால் கண்களுக்கு மேல் நேரடியாக இதனை தடவ கூடாது, இமைகள் மீதோ, கண்களை சுற்றியோ தடவலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் உங்களுக்கு மிக உபயோகமாக இருந்திருக்கும் என நம்புகிறோம். கற்றாழையில் இயற்கையாகவே நிறைய மருத்துவ புதையல்கள் உள்ளன. அவற்றையெல்லாம் சரியாக, மற்ற ரசாயனங்கள் எல்லாம் இருக்குமோ? என்ற பயமில்லாமல் அனுபவிக்க, வீட்டிலேயே வளர்ப்பது தான் சிறந்தது. வளர்ப்பதும் சுலபம் தான்.
எல்லாம் சரி எப்படி வளர்ப்பது என கேட்கிறீர்களா? அதற்கு தான் நான் இருக்கிறேனே. கற்றாழையை நன்றாக வளர்ப்பதெப்படி என்பதை பற்றி அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்.
இதை தவிர உங்களிடம் வேறு ஏதேனும் டிப்ஸ் இருக்கிறதா? அனைவருக்கும் அது பயன்தர கமெண்டில் அதை தெரியப்படுத்துங்கள். ஏதேனும் சந்தேகங்களோ, கேள்விகளோ இருக்கிறதா? தொடர்பு பக்கத்தின் மூலமாகவோ, இடப்பக்கத்திலுள்ள WhatsApp Iconஐ கிளிக் செய்தும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நீங்கள் பயன்படுத்தும்போது ஒவ்வாமை ஏற்பட்டாலோ, இல்லை சந்தேகங்கள் ஏதேனும் இருப்பினும் மருத்துவரை கலந்தாலோசிப்பது பரிந்துரைக்கப்படுகின்றது.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் சுற்றத்திற்கு இதை பகிர்ந்து ஆர்கானிக் பசுமை அன்பை பரப்பலாமே!
ஒன்றாய் விதைப்போம்! ஒன்றாய் வளர்வோம்! நன்றி
இது ஒரு இரு மொழி பதிவு. To read this post in English click here!